53 ஆண்டு வரலாறு.. மாற்றி எழுதிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. 22 வயதில் சுனில் கவாஸ்கர் சாதனை முறியடிப்பு!
கான்பூர்: 23 வயதிற்குள் ஒரு ஆண்டில் அதிக ரன்களை விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசியதன் மூலமாக இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 51 பந்துகளில் 2 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 71 ரன்களை விளாசினார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் 45 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 51 ரன்களை சேர்த்தார்.

இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதங்கள், 7 அரைசதங்கள் உட்பட 1,217 ரன்களை விளாசி இருக்கிறார். இந்தப் போட்டியில் 2 அரைசதங்கள் விளாசியதன் மூலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 சாதனைகளை படைத்துள்ளார்.
1971ஆம் ஆண்டு 22 வயதில் இந்திய அணிக்காக சுனில் கவாஸ்கர் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த ஆண்டில் மட்டும் சுனில் கவாஸ்கர் 913 ரன்களை விளாசி தள்ளினார். 23 வயதை எட்டுவதற்குள் சுனில் கவாஸ்கர் ஒரே ஆண்டில் 913 ரன்கள் விளாசியதை, நேற்று வரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. 53 ஆண்டு கால வரலாற்றை, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்றியுள்ளார்.
22 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நடப்பாண்டில் மட்டும் 929 ரன்களை விளாசி இருக்கிறார். டிசம்பர் 28ஆம் தேதி தான் ஜெய்ஸ்வால் தனது 23 வயதை எட்டுவதால், அவர் இன்னும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஜெய்ஸ்வால் எளிதாக ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாச முடியும். அதேபோல் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசினார்.
இந்த இரு இன்னிங்ஸ்களின் ஸ்ட்ரைக் ரேட் 141.18 மற்றும் 113.33 ஆகும். இதன் மூலமாக இரு இன்னிங்ஸ்களிலும் இரு அரைசதங்களை 100 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக முன்னாள் தொடக்க வீரர் சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அரைசதம் அடித்திருந்தார்.
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே சீசனில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதுவரை ஜெய்ஸ்வால் 11 போட்டிகளில் விளையாடி 1,217 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே சீசனில் 1,200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2019 முதல் 2021 வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில் அஜிங்கியா ரஹானே 1,159 ரன்கள் விளாசியதே இந்திய வீரரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications