சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற பின், அடுத்த 15 நிமிடங்களில் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் காலை நடந்த 2 மணி நேரமும் ஃபீல்டிங் செய்த ஜெய்ஸ்வால், உடனடியாக ஓய்வு கூட எடுக்காமல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய அஸ்வின், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதன் காரணமாக அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதேபோல் முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை டாப் ஆர்டர் வீரர்கள் வெளிப்படுத்திய நிலையில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் 2வது இன்னிங்ஸில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒப்பீட்டளவில் ஜெய்ஸ்வாலின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது. ஃபீல்டிங்கில் துடிப்புடன் இருந்த ஜெய்ஸ்வால், 2 அபாரமான கேட்ச்களை பிடித்தார்.
இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் பேட்டிங் செய்த போது, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேப்பாக்கம் மைதானத்தில் வெளியே உள்ள பி கிரவுண்டில் த்ரோ டவுன் வீசுவோருடன் பயிற்சியில் ஈடுபட்டார். விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டது பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்ட சூழலில், அருகில் இருந்த ஜெய்ஸ்வாலை யாரும் பார்க்கவில்லை.
அதேபோல் 4வது நாள் ஆட்டம் முடிவடைந்த பின் அடுத்த 15 நிமிடங்களில் உடையை மாற்றிவிட்டு நேரடியாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறிய போதும், இந்திய அணி வீரர்கள் ஓய்வறையில் இருந்த போதும் கூட சில மணி நேரங்கள் ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சியில் தீவிர இருந்திருக்கிறார்.
ஜெய்ஸ்வால் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது ராபின் உத்தப்பா கூறுகையில், நான் ஒரு சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினேன். அந்த சீசனில் பேட்டிங் பயிற்சிக்காக சென்ற போது, காலை, மதியம், மாலை மற்றும் இரவு என்று 11 மணி நேரங்களுக்கும் மேலாக ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்டார்.
இளம் வீரர் ஒருவர் இப்படி பேட்டிங் பயிற்சி செய்வது வியப்பாக இருந்ததாக தெரிவித்தார். அதேபோல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டால், எங்களின் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் வரும். அவ்வளவு நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார் என்று கூறியிருந்தார்.
இந்திய அணிக்கு வந்த பின்னரும் ஜெய்ஸ்வாலின் பேட்டிங் பசி குறையவில்லை என்றே இதன் மூலமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களை குவித்துவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், 22 வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர தொடக்க வீரராக இடம்பிடித்துவிட்டார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.