டாக்கா : இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சுமார் 45 நாட்களுக்கு பிறகு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட போகிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை பாகிஸ்தானை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய உத்வேகத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் விளையாடினாலும் அனைவரின் எதிர்பார்ப்பும் ஜெய்ஸ்வால் மீது தான் இருக்கிறது. எப்படி சேவாக் வலது கை பேட்ஸ்மேனாக தொடக்கத்தில் அதிரடி வீரராக விளையாடுவாரோ, அதேபோல் ஜெய்ஸ்வால் இடது கை பேட்ஸ்மேன் ஆக அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக மாபெரும் சாதனையை படைக்க போகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஜெய்ஸ்வால் தற்போது 1028 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வங்கதேசத்துக்கு எதிராக ஜெய்ஸ்வால் 132 ரன்கள் அடித்தால் அவர் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் 2019- 21 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1159 ரன்கள் அடித்திருந்தார். தற்போது ஜெய்ஸ்வால் 132 ரன்கள் அடித்தால் அந்த ரெக்கார்டை முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு உலக டெஸ்ட் சைக்கிளில் ஆயிரம் ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெறுவார். இதற்கு முன்பு ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 371 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஜோ ரூட் 1398 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். ஜெய்ஸ்வால் இன்னும் 371 ரன்கள் அடித்தால் ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து விடுவார்.
இதேபோன்று ஜெய்ஸ்வால் நடப்பு 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 25 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும் அவர் 9 சிக்சர் அடித்தால் டெஸ்ட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய மெக்குல்லம் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார். தற்போது மெக்குல்லம் 33 சிக்ஸர்கள் அடித்து இருப்பது சாதனையாக கருதப்படுகிறது.