மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அண்டர் 19 கிரிக்கெட்டில் அறிமுகமாகி அடுத்த யுவராஜ் சிங் என பெயர் எடுத்தவர் அபிஷேக் ஷர்மா.
பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா, ஐ பி எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி புகழின் உச்சத்திற்கு சென்றார். ஐபிஎல் தொடரில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் காரணமாக கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு இன்னொரு அதிரடி வீரர் கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் அதன் பிறகு நடைபெற்ற டி20 போட்டியில் 10 ரன்கள் மட்டுமே கிடைத்த அபிஷேக் ஷர்மா நான்காவது டி20 போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதை அடுத்து ஐந்தாவது டி20 போட்டியில் 14 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தொடரில் சதம் அடித்தும் அதன் பிறகு நடைபெற்ற இலங்கை தொடரில் அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழலில் ஜெய்ஸ்வால், கில் போன்ற வீரர்களுக்கு வங்கதேச தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சூழலில் குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். ஏழு பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 228 என்ற அளவில் இருந்தது. எனினும் அபிஷேக் ஷர்மா தன்னுடைய கவனக்குறைவு காரணமாக ரன் அவுட் ஆனார்.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அடுத்ததாக மீண்டும் ஒரு பெரிய ஸ்கோர் வரப்போகிறது என்று கூறியிருந்தார். ஆனால் அவர் ரன் அவுட் ஆனதை அடுத்து கடுப்பான யுவராஜ் சிங், அந்த ரசிகரிடம் மூளையை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே பெரிய ஸ்கோர் வரும் என்று அபிஷேக் ஷர்மாவை கடுமையாக சாடி பதிவிட்டிருந்தார்.
அபிஷேக் ஷர்மா யுவராஜ் சிங்கை தான் தனது குரு என்று பாவித்து வருகிறார். யுவராஜால் தான் கிரிக்கெட் பக்கமே வந்ததாக கூறிய நிலையில் தனது சிஷ்யன் மோசமான முறையில் ரன் அவுட் ஆனதால் கடுப்பாகி யுவராஜ் திட்டி இருக்கிறார். இதனால் இரண்டாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா வங்கதேச பந்துவீச்சை பொளக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.