மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு விவாகரத்து ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அவர்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதில் இருந்து பின்வாங்கி இருந்தனர். இது பற்றி பல்வேறு ஊகங்களும் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் மும்பையின் பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது இருவருக்கும் நீதிபதி 45 நிமிடம் ஆலோசனையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அந்த ஆலோசனை நேரத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் ஒருமனதாக, மனம் உவந்து வாழ்க்கையில் பிரிவதாக அறிவித்தனர்.

அதை ஏற்று நீதிபதி அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாழக்கிழமை அன்று மாலை 4:30 மணிக்கு நீதிபதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை வழங்கியதாக நீதிமன்ற வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
இது குறித்து சாஹல் வெளியிட்டு இருக்கும் பதிவில் கடவுளுக்கு நன்றி எனவும், பலமுறை கடவுள் தன்னை காப்பாற்றினார் எனவும் இந்த விவகாரத்தை பற்றி சூசகமாக சொல்லி இருக்கிறார். சாஹலின் பதிவில், "நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கடவுள் என்னை பலமுறை பாதுகாத்து இருக்கிறார். எனவே அவர் என்னை எத்தனை முறை பாதுகாத்தார் என்பதை நான் கற்பனை தான் செய்து பார்க்க முடியும். கடவுளே உனக்கு நன்றி" என்று கூறி இருக்கிறார்.

யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சாஹலின் திருமணத்திற்கு பிறகு அவரது வாய்ப்பு குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்று விட்டது.
சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் பலரும் விவாகரத்து பெற்றதையும் இந்த விவாகரத்தையும் சேர்த்து வைத்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், முகமது ஷமி போன்ற முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்விலும் இதே போன்ற விவாகரத்து சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
ஏன் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இவ்வாறு விவாகரத்துகள் நடக்கின்றன எனவும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சிலர் இதை கேலிச்சித்திரமாக மாற்றி மீம்களை போட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களின் தொடர் விவாகரத்துகள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.