மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சூப்பர் 8 போட்டிகளில் ரன்களை குவிப்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி போட்டிகள் என்றால் இந்திய அணி விராட் கோலியை தான் அதிகம் சார்ந்திருக்கும். ஏனென்றால் இதுவரை விராட் கோலி விளையாடிய பல்வேறு ஐசிசி தொடர்களிலும் அதிக ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றவர் விராட் கோலி தான். 2016 டி20 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பை, 2023 உலகக்கோப்பை என்று விராட் கோலி வாங்கிய ஐசிசி விருதுகளுக்கே தனி பட்டியல் உள்ளது.

ஆனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 5 ரன்களை மட்டுமே மொத்தமாக சேர்த்துள்ளார். அதிலும் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனையை விராட் கோலி படைத்தார்.
இதற்கு விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவதே காரணம் என்றும், அவர் மீண்டும் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசுகையில், நியூயார்க் மைதானத்தில் நடந்த போட்டிகளில் விராட் கோலியை ரன்கள் சேர்க்கவில்லை என்பது உண்மை தான்.
ஆனால் வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. நியூயார்க் பிட்ச் கொஞ்சம் சவாலானது. என்னை பொறுத்தவரை விராட் கோலியிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும் என்று நினைக்கிறேன். டி20 உலகக்கோப்பை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது, அழுத்தம் அதிகமாகும். அப்போது நிச்சயம் விராட் கோலி ரன்களை குவிக்க தொடங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்து பேசுகையில், அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் இருந்த போதும், சூர்யகுமார் யாதவ் பதற்றமில்லாமல் அரைசதம் அடித்தார் என்று பாராட்டியுள்ளார்.