ஃபுளோரிடா : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை பயன்படுத்த வேண்டும் என்று ஸ்ரீசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து தெரிய வந்துள்ள நிலையில், இன்னும் இங்கிலாந்து அணி மற்றும் வங்கதேசம் அணியின் நிலை மட்டும் அந்தரத்தில் உள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளை சூப்பர் 8 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடப்பதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் சிவம் துபே மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேசுகையில், என்னை பொறுத்தவரை நாக் அவுட் போட்டிகளில் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சிவம் துபேவால் 2 ஓவர்கள் கூட வீச முடியவில்லை என்றால், நிச்சயம் சஞ்சு சாம்சனை தான் தேர்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால் சூழலுக்கு ஏற்ப விரைவாக தகவமைத்து கொண்டு அட்டாக் செய்யக் கூடிய வீரர் சஞ்சு சாம்சன். இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவாக விக்கெட்டை கொடுத்து வெளியேறினால், சஞ்சு சாம்சன் போன்ற வீரரால் இன்னிங்ஸை கட்டமைத்து கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்களுடன் அட்டாக்கில் ஈடுபட முடியும் என்று நினைக்கிறேன்.
அதேபோல் தொடக்க வீரர்களாக களமிறங்கி வரும் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணியை பிரிக்க தேவையில்லை என்று கருதுகிறேன். அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல சகோதர பாசம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டிகளை வெல்ல வேண்டும். அது இந்திய கிரிக்கெட்டுக்கும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.