நியூயார்க் : இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க வராதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்து வருகிறது. இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது கனடா அணிக்கு எதிராக நாளை இந்திய அணி விளையாடும் போட்டிக்கு பின், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில், நாடு திரும்பவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், சுப்மன் கில் ஹோட்டல் அறையிலேயே அதிக நேரம் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ரிசர்வ் வீரர்களான ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் இந்திய அணி விளையாடும் போட்டியை காண மைதானத்திற்கு நேரில் வரும் சூழலில், சுப்மன் கில் எந்த போட்டிக்கும் வராமல் ஹோட்டலிலேயே நேரம் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க கூட சுப்மன் கில் மைதானத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட உள்ள நிலையில், சுப்மன் கில் நாடு திரும்பவுள்ளார். இதற்கு சுப்மன் கில்லின் ஒழுங்கீனமான நடவடிக்கையே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டி20 உலகக்கோப்பையை நேரில் பார்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர், சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா வந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் போட்டிகளை பார்த்த பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மறுபக்கம் சாரா டெண்டுல்கர் தனது தோழிகளுடன் நியூயார்க்கை சுற்றி பார்த்து வருகிறார். இதுதொடர்பாக தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதனால் சுப்மன் கில் ஓய்வு நேரங்கள் மற்றும் போட்டியின் போதும் கூட சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்ற செல்வதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே பல்வேறு சூழல்களில் இருவரும் சிக்கியுள்ளனர். அதேபோல் நட்சத்திர வீரரான சுப்மன் கில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால், கோபத்தில் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.