மியாமி: தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மழை பெய்யாத போதும் மைதானங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதை அடுத்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இப்படி ஒரு உலகக்கோப்பையை நடத்துவதற்கு பதிலாக இதை ரத்து செய்யலாம் என கொந்தளித்து வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் மழையின் காரணமாக இந்தியா மற்றும் கனடா விளையாடவிருந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாது நிலையில், டாஸ் போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது. ஆடுகளத்தின் அவுட் ஃபீல்டு பகுதியில் மழைநீர் தேங்கி இருந்ததால் இந்தப் போட்டி கைவிடப்பட்டு இருந்தது.

நேற்று பாகிஸ்தானின் தலையெழுத்தை நிர்ணயிக்க இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை நீர் தேங்கி இருந்த காரணத்தால் கைவிடப்பட்டது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்தது. அங்கு கடுமையான மழை பெய்து வருவதால் இந்த இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டு இருந்தன.
தொடர்ந்து முக்கிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு வருவதால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த இரண்டு போட்டிகளின் போதும் போட்டி நேரத்துக்கு முன்பு வரையே மழை பெய்தது. போட்டி நேரம் துவங்கிய பின் மழை பெய்யாவிட்டாலும் ஆடுகளத்தின் அவுட்ஃபீல்டு பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி இருந்தது. சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குட்டை போல ஆங்காங்கே தேங்கி இருந்தது. அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பிட்ச் மற்றும் அதனை சுற்றிய சில அடி தூரத்தை மட்டுமே கவர் போட்டு மூடி இருந்தார்கள். கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளது. அனைத்து மைதானங்களையும் முழுமையாக கவர் போட்டு மூட வேண்டும். ஆனால், இலங்கை மற்றும் இந்தியாவில் சில மைதானங்களை தவிர உலகில் வேறு எந்த கிரிக்கெட் மைதானத்திலும் முழு ஆடுகளத்தையும் கவர் போட்டு மூடுவதில்லை. அதன் காரணமாக மழை பெய்தால் பிட்ச் மட்டும் பாதிப்பின்றி இருக்கிறது. ஆனால், அவுட் ஃபீல்டு பகுதியில் மழை நீர் தேங்குவதால் போட்டியில் தாமதம் ஏற்படுகிறது.
இதை சுட்டிக் காட்டிய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், முழு ஆடுகளத்தையும் மூடுவதற்கு உங்களிடம் கவர் இல்லை என்றால் நீங்கள் உலகக் கோப்பையே நடத்த வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். ரசிகர்களும் இந்த உலகக்கோப்பையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிடலாம் என கொந்தளித்த வருகின்றனர். முக்கிய போட்டிகளை கைவிட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்குவதன் மூலம், பிற அணிகள் பாதிக்கப்படுவதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.