லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது ஒரு நாள் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று தொடரை வென்றது.அதனை தொடர்ந்து நடந்த ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று லீட்ஸில் நடைபெறவிருக்கிறது.இந்திய அணியை பொறுத்தவரையில் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி அருமையான தொடக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இந்திய அணியின் பேட்டிங் முற்றிலுமாக டாப் ஆர்டரை மட்டுமே நம்பியுள்ளது. நடுவரிசையில் விளையாடும் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். இல்லையெனில் வெற்றி மீண்டும் கை நழுவி செல்ல வாய்ப்புகள் அதிகம்.தோனி அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடந்த போட்டியில் மிகவும் பொறுமையாக ஆடியதால் அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் வர தொடங்கியது குறிப்பிடத்தக்கது..இந்திய அணியில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு தான். பந்துவீச்சை பொறுத்தவரை சித்தார்த் கவுலுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் சதம் அடித்து மீண்டும் பார்ம் பெற்றிருப்பது அவர்களின் கூடுதல் பலம். மேலும் அவர்கள் குல்தீப் யாதவின் சுழல் பந்துவீச்சையும் எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவர்களது தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.கடைசி போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார் என்றே தெரிகிறது. இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் மற்றும் சாம் கரண் ஆகியோர் அணியில் இந்திய ஏ அணிக்கான டெஸ்ட் போட்டியில் விளையாட அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.இப்போட்டியின் முடிவு ஐசிசி தரவரிசையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இங்கிலாந்து தோற்றாலும் கூட தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லீட்ஸில் கடைசியாக இங்கிலாந்து விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.