மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் - சுப்மன் கில் கூட்டணி மொத்தமாக 417 பந்துகளில் 188 ரன்கள் எடுத்து புதிய வரலாறு படைத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மண்ணில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய கூட்டணி என்ற புதிய சாதனையை இருவரும் படைத்திருக்கின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செய்து வரும் நிலையில், இந்திய அணி டிரா செய்யப் போராடி வருகிறது. 4வது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் இருவரும் டக் அவுட்டாகி முதல் ஓவரிலேயே வெளியேறினர்.

ஆனாலும் கேஎல் ராகுல் - சுப்மன் கில் கூட்டணி நிதானமாக ஆடி விக்கெட்டை கொடுக்கவில்லை. இந்த நிலையில் 5வது நாள் ஆட்டத்தை மீண்டும் இருவரும் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடனடியாக பவுலிங் அட்டாக்கில் வந்தார். அவரை இருவரும் கவனமாக எதிர்கொண்டனர். ஆனால் கேஎல் ராகுல் திடீரென தாழ்வாக வந்த பவுன்ஸை கணிக்காமல் 90 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
230 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக சுப்மன் கில் - கேஎல் ராகுல் இருவரின் வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப்பும் முடிவுக்கு வந்தது. இவர்கள் இருவரும் இணைந்து மொத்தமாக 417 பந்துகளை எதிர்கொண்டு 188 ரன்களை சேர்த்திருக்கின்றனர். அதாவது 69.3 ஓவர்களை இருவரும் எந்த சிக்கலும் இல்லாமல் ஆடி இருக்கின்றனர்.
21ஆம் நூற்றாண்டில் இந்திய அணியின் மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்களில் ஒன்றாக அமைந்துள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் - விஹாரி இருவரும் போராடியதைப் பலருக்கும் நினைவுபடுத்தியது. அதுமட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளில் இந்திய வீரர்களில் யாராலும் இப்படியொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை.
2002ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் - சஞ்சய் பங்கர் கூட்டணி 405 பந்துகளில் 170 ரன்களை எடுத்திருந்தது. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் - கங்குலி கூட்டணி 357 பந்துகளை எதிர்கொண்டு 249 ரன்களை சேர்த்திருந்தது. இந்த 2 பார்னர்ஷிப்களை விடவும் கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஆகியோர் அதிக பந்துகளை எதிர்கொண்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் இருவரும் பாராட்டி வருகின்றனர்.