நாக்பூர்: இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு நிலையான வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்திய டி20 அணியில் அக்சர் பட்டேல் ஆல் - ரவுண்டர் என்ற அடிப்படையில் தொடர்ந்து வாய்ப்பை பெற்று வருகிறார். ஒருநாள் அணியில் அவருக்கு போதிய வாய்ப்பு இதுவரை கிடைக்காமல் இருந்து வந்தது.
ஆனால், நேற்று நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் அக்சர் பட்டேல். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 248 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி 249 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த போது ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்கினார் அக்சர் பட்டேல்.

பொதுவாக ஒருநாள் போட்டிகளில் அக்சர் பட்டேல் ஏழாம் வரிசை, எட்டாம் வரிசையில் தான் பேட்டிங் செய்வார். சில சமயங்களில் மட்டுமே பேட்டிங் வரிசையில் மேலே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், முக்கியமான சேஸிங்கின் போது அக்சர் பட்டேல் ஐந்தாம் வரிசையில் இறங்கி 47 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். ஆறு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 110.64 என்பதாக இருந்தது.
கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு முன்னதாகவே அக்சர் பட்டேல் களமிறங்கி அரை சதம் அடித்தது பாராட்டையும் பெற்றது. இனி அக்சர் பட்டேலை ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று மட்டும் பார்க்காமல் பேட்ஸ்மேன் என்றும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இதே போல ஒரு ஆட்டத்தை தான் அக்சர் பட்டேல் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் மிடில் ஆர்டரில் இறங்கி 31 பந்துகளில் 47 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல அவர் ஒரு ஃபிளோட்டிங் பேட்ஸ்மேன் (floating batsman) ஆக, பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் ஆடக் கூடியவராக தனது இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இது போன்ற ஒரு வீரரை அணியில் சேர்ப்பதால் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் கிடைப்பதுடன், எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் ஒரு பேட்ஸ்மேனும் கிடைப்பார். எனவே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அக்சர் பட்டேல் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.