நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் எந்த இந்திய பவுலரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்து வரலாறு படைத்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டி, டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டி என மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் தனது அறிமுகப் போட்டியிலேயே மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் ஹர்ஷித் ராணா.

இந்த சாதனையை வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதுவரை செய்தது இல்லை. மேலும், இந்த சாதனையை அவர் மூன்று மாத இடைவெளியில் செய்து இருக்கிறார் என்பதும் பிரமிக்கத்தக்கது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
அந்த போட்டியில் அவர் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் தனது சர்வதேச டி20 அறிமுகத்தை பெற்றார். அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா 7 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தாலும் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாத நிலை இருப்பதால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை மாற்று பந்துவீச்சாளராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதற்காகவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பரிசோதனை முயற்சியாக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்ஷித் ராணா தான் வீசிய முதல் ஓவரிலேயே 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்து ஒரு மெய்டன் ஓவரையும், அதன் பின் ஒரே ஓவரில் 26 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது அறிமுகத்தில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் செய்தார்.
அதன் பின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பென்ப டக்கெட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரது விக்கெட்களை ஒரே ஓவரில் வீழ்த்தினார். அதன் பின் லியாம் லிவிங்ஸ்டன் விக்கெட்டையும் வீழ்த்தினார். மறுபுறம் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.