நாக்பூர்: இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான ஹர்ஷித் ராணா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பவுலிங்கில் இரண்டு எல்லைக்கும் சென்றார். ஒரு ஓவரில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான அறிமுகம் பெற்ற இந்திய பவுலர் என்ற சாதனையை செய்த அவர், மற்றொரு ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு ஓவரை மெய்டனாகவும் வீசி இருந்தார்.
இவ்வாறு கலவையான பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹர்ஷித் ராணா. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார்கள்.

இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமி பவுலிங்கில் துவக்கம் அளித்தனர். ஹர்ஷித் ராணா இன்னிங்ஸின் 2வது ஓவரை வீசினார். அவரது அந்த முதல் ஓவரில் 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால், அடுத்த வீசிய ஓவரை மெய்டனாக வீசி வியப்பை ஏற்படுத்தினார்.
அதன் பின்பு ஹர்ஷித் ராணா வீசிய அவரது மூன்றாவது ஓவரில் ஃபிலிப் சால்ட் 3 சிக்ஸ் மற்றும் 2 ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. அதன் பின் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஹர்ஷித் ராணாவுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஹர்ஷித் ராணா வீசிய நான்காவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இவ்வாறாக ஹர்ஷித் ராணா தான் வீசிய நான்கு ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது, ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை எடுப்பது, மெய்டன் வீசுவது என இரண்டு எல்லைகளுக்கும் சென்று வந்தார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். மூன்று விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்த பின் இங்கிலாந்து அணியின் ரன் குவிக்கும் வேகம் வெகுவாக சரிந்தது.
பின்னர் ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராணா மேலும் ஒரு விக்கெட்டை சாய்த்தார். அவர் 7 ஓவர்களில் 53 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.