IND vs ENG: தெறிக்கவிட்ட ஸ்ரேயாஸ்.. என்னா அடி.. மிரண்ட இங்கிலாந்து.. எளிதாக கிடைத்த வெற்றி
நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் நான்காம் வரிசையில் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 30 பந்துகளில் அரை சதம் அடித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 163.89 என்பதாக இருந்தது.
மேலும், ஒரு நாள் போட்டிகளில் தனது இரண்டாவது அதிவேக அரை சதத்தை அடித்து இருந்தார். முன்னதாக அவர் 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 28 பந்துகளில் அடித்த அரைசதமே அவரது அதிவேக ஒரு நாள் போட்டி அரை சதமாக உள்ளது. மேலும், இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் ஆடி அணியின் ரன் ரேட் அழுத்தத்தை முற்றிலுமாக நீக்கினார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்களையும், ரவீந்திர சடேஜா மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர். அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா சுமாரான துவக்கத்தை அளித்தனர்.
ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், ரோஹித் சர்மா 2 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் அபாரமாக ஆடி அரை சதத்தை கடந்தார். ஐந்தாம் வரிசையில் இறங்கி அக்சர் பட்டேல் அதிரடியாக ரன் சேர்த்தார்.
பின்னர் அக்சர் பட்டேல் 47 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தும், சுப்மன் கில் 96 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 9, ரவீந்திர ஜடேஜா 12 ரன்கள் சேர்த்து இந்திய அணி 38.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட உதவினர். இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications