நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 30 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அவர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார். அவரது ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது இருந்தது.
இந்த நிலையில் ஒரு உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். அதாவது முதல் ஒருநாள் போட்டியில் பிளேயிங் லெவனில் முதலில் தனக்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டு இருந்ததாகவும், பின்னர் வேறு ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டதால் தான் அணியில் இடம் பிடித்ததாகவும் குறிப்பிட்டார்.

முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவருக்கு தான் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது. அதன் காரணமாக விராட் கோலி கடைசி நேரத்தில் விலகியதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா துவக்கம் அளித்து ஆடி இருந்தனர். பொதுவாக சுப்மன் கில் தான் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து துவக்கம் அளித்து வந்தார். ஆனால், இந்த முறை அதில் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதனால் விராட் கோலிக்கு பதிலாக தான் ஜெய்ஸ்வால் ஆடுகிறார் என அனைவரும் எண்ணினர்.
உண்மையில் ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக ஆட வைப்பது என இந்திய அணி நிர்வாகம் முன்பே முடிவு செய்து இருந்ததாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனிலேயே இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஏனெனில், இந்திய அணியின் நான்காம் வரிசையில் மிக சிறப்பாக ரன் குவித்து வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும் 2023 உலகக் கோப்பை அரை இறுதியில் அவர் சதம் அடித்திருந்தார். இப்படி ஒரு வீரரை எவ்வாறு இந்திய அணி நிர்வாகம் எந்த காரணமும் இன்றி நீக்க முடியும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடந்த சில மாதங்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அணியில் இடம் அளிப்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி நிர்வாகம் நன்றாக ரன் குவிக்கக் கூடிய வீரரை நீக்குவது என்பது என்ன மாதிரியான முடிவு என விமர்சித்து வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 248 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் பட்டேல் 52 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.