நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 87 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்து இருந்தார். அவர் சதம் அடிக்க வேண்டி அவசர, அவசரமாக ஷாட் அடித்து தான் விக்கெட்டை இழந்தார் என்ற விமர்சனம் எழுந்தது. அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால், தனது சதம் தவறிவிடுமோ என்ற அச்சத்தில் வெற்றி இலக்கு நெருங்கிய நேரத்தில் அதிரடியாக ஆட முயன்றார். இது பற்றி விமர்சனம் எழுந்த நிலையில், சுப்மன் கில் அதை மறுத்து இருக்கிறார். நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, சுப்மன் கில் சதத்திற்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

எப்படியும் சதத்தை நிறைவு செய்து விடலாம் என சுப்மன் கில் நினைத்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா அப்போது ஒரு சிக்ஸ் அடித்தார். அதனால் தனது சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவி போய்விடுமோ என்ற எண்ணத்தில் சுப்மன் கில் அடுத்த ஓவரில் ஃபோர் அடித்தார். அதைத் தொடர்ந்து ஒரு சிக்ஸ் அடிக்க முயன்ற போது கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நேற்று போட்டி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களை சுப்மன் கில் சந்தித்தார். அப்போது இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. "நீங்கள் சதம் அடிப்பதற்காக அந்த ஷாட்டை ஆடி ஆட்டம் இழந்தீர்களா?" என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுப்மன் கில், "நான் சதம் அடிக்க வேண்டும் என குறிவைத்து ஆடவில்லை. நான் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செய்ய நினைத்தேன். வெற்றிக்கு 40 அல்லது 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்திருந்தாலும் அந்த ஷாட்டை ஆடி இருப்பேன். நாட்டுக்காக போட்டிகளை வெல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.
மேலும், இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இருந்தார். அவரது அந்த அதிரடி ஆட்டம் தான் நிதானமாக ஆட உதவியதாகவும் சுட்டிக்காட்டினார். "ஸ்ரேயாஸ் அதிரடி ஷாட்களை ஆடியது நான் நிதான ஆட்டம் ஆடுவதற்கு உதவியது. மற்ற பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடும்போது நாம் பின்னணியிலிருந்து ஆடுவது நல்ல விஷயம். ஸ்ரேயாஸ் ஆட்டம் இழந்து சென்ற பின் நான் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடினேன்." என்றார் சுப்மன் கில்.