மும்பை: இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்கக் கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார். மேலும், இந்திய அணியில் கேப்டன்கள் ஆகும் யோகமுடைய நான்கு பேர் இருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
சமீப காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்? என்பதை ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன்ஸ்டோன் லோபோ என்ற ஜோதிடரிடம் சமீபத்தில் ஒரு பேட்டி எடுக்கப்பட்டிருந்தது.

அதில் கிரிக்கெட் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்தை வைத்து அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணித்து கூறினார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா விரைவில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டு வருகிறது.
இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. அது குறித்து கிரீன்ஸ்டோன் லோபோ சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார். 90களின் இறுதியில், அதாவது 1999-இல் பிறந்த சுப்மன் கில்லை அவசரப்பட்டு கேப்டனாக்கக் கூடாது எனவும், அவருக்கு முன் பிறந்த நான்கு வீரர்களுக்கு கேப்டனாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
"சுப்மன் கில் 90களின் இறுதியில் பிறந்தவர். செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர். அவருடைய ஜாதகம் சக்தி வாய்ந்ததாக உள்ளது. அதனால் தான் அவருக்கு துணை கேப்டன் பதவி கிடைத்து இருக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தாலும் அதை இந்த ஜாதகத்தை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்."
"அவரை தவிர்த்து இந்திய அணியில் கேப்டன் ஆகும் வாய்ப்பு யாருக்காவது உள்ளதா? என்று கேட்டால் நிச்சயம் உள்ளது. கே எல் ராகுல் 1992 இல் பிறந்தவர். அவரது ஜாதகம் சிறப்பாக உள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் 1993 பிறந்தவர்கள். ஸ்ரேயாஸ் 1994-இல் பிறந்தவர். அவர்கள் அனைவரது எதிர்காலமும் சக்தி வாய்ந்ததாக உள்ளது."
"அந்த வகையில் பார்த்தால் இந்திய அணியில் ஏற்கனவே கேப்டன் ஆகும் வாய்ப்பு உடைய நான்கு பேர் இருக்கிறார்கள். அவர்கள் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, சுப்மன் கில்லை இப்போது கேப்டன் ஆக்குவதற்கு சரியான நேரம் இல்லை." என்று எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது சுப்மன் கில் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடி வருகிறார். அவர் டெஸ்ட் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.