நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஏன் என்ற விமர்சனம் எழுந்து இருக்கிறது. அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இந்த போட்டியில் விளையாடினார். அவருக்கு இதுவே அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி இடம் பெற்றார். இரண்டு முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் இருந்தனர். நாக்பூர் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனாலும் கூட பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண வேண்டிய சிக்கலில் உள்ளது.
முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவரால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. முகமது ஷமி நீண்ட காலத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால், அவர் இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவரால் நீண்ட நேரம் பவுலிங் செய்ய முடியாத நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளன. அங்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்றாலும், இரண்டு முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும். அந்த வகையில் முகமது ஷமியுடன் அர்ஷ்தீப் சிங் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏனென்றால், அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அத்துடன் அவர் டி20 போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அணியில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்ச்சிக்கு உதவும். ஆனால், ஹர்ஷித் ராணா மாற்று வேகப்பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூவருக்கும் வாய்ப்பு அளித்திருக்கலாம். எனினும், ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவருக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.