IND vs ENG: யாரு இவரு ஆல்ரவுண்டரா? 2,3 ஓவர் கூட வீச முடியாது.. வசீம் ஜாபர் சாடல்
மும்பை: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து, 23 வயதான ஆல்-ரவுண்டர் சூரியன்ஷ் ஷெட்ஜே குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ஆலோசனை வழங்கியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு தரமான ஆல்-ரவுண்டர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது என்று ஜாபர் கூறியுள்ளார்.
புதிய பந்திலும் வீசக்கூடிய பாண்டியா, குறைந்தபட்சம் மூன்று ஓவர்களையாவது வீசுவார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய சூரியன்ஷ் ஷெட்ஜே குறித்துப் பேசிய ஜாபர், தற்போதைய நிலையில் 23 வயதான இந்த வீரரால் மூன்று முதல் நான்கு ஓவர்கள் வரை பந்துவீச முடியாது என்று கூறினார்.

"ஹர்திக் சில நேரங்களில் புதிய பந்தைக் கொண்டு பந்துவீசுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் குறைந்தபட்சம் மூன்று ஓவர்களை வீசுவதோடு, ஒரு பினிஷர் பாத்திரத்தையும் சிறப்பாகச் செய்கிறார். நீங்கள் சூரியன்ஷை விளையாட வைக்கிறீர்கள், ஆனால் தற்போதைய சூழலில் 3-4 ஓவர்கள் வீசும் திறன் அவரிடம் இல்லை. நிதிஷும் அப்படித்தான். தற்போதைக்கு அவர்கள் அந்த அளவிற்குத் தயாராகவில்லை.
எனவே, இந்திய அணி நிச்சயமாக ஹர்திக்கை இழந்து தவிக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், பேட்டர்கள் சிறப்பாக விளையாடி எதிரணியை விட அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்," என்று தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் தொடர் தோல்வி ஏமாற்றமளித்தாலும், ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு சாதகமான விஷயங்களாக அமைந்ததாக வாசிம் ஜாபர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இது ஒட்டுமொத்த அணியின் கூட்டுத் தோல்வி என்றும், குறிப்பாக பேட்டிங் வரிசையின் சொதப்பல் என்றும் அவர் சாடினார். "ஹர்ஷித் தனது கம்பேக் போட்டியில் சிறப்பாக பந்துவீசியதுடன், பேட்டிங்கிலும் நன்றாகச் செயல்பட்டார். அவரிடம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தெளிவாகக் காண முடிகிறது. 8 மற்றும் 9-வது இடங்களில் களமிறங்கும் அவரது பேட்டிங்கை நாம் நம்பலாம். இந்த இரண்டு போட்டிகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு நேர்மறையான விஷயமாக இருந்துள்ளார்.
பிரின்ஸும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ஒட்டுமொத்தமாக அணி சிறப்பாகச் செயல்படவில்லை, குறிப்பாக பேட்டிங் ஏமாற்றம் அளித்தது," என்று கூறினார். ஹர்ஷித் இரண்டு போட்டிகளில் 10.25 சராசரியிலும், 5.85 எகானமி ரேட்டிலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் அவர் தனது பங்களிப்பை அளித்தார். தனது முதல் போட்டியில் விளையாடிய பிரின்ஸ் யாதவ் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
"இங்கிலாந்து தொடர் நிச்சயமாக ஒரு கடினமான சவாலாக இருக்கும். அயர்லாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு, தங்களாலும் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து நம்பும். பும்ரா மற்றும் ஹர்திக் இல்லாதது அணியில் பலவீனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் மிக முக்கியமான வீரர்கள். இவர்களது இடத்தை மற்ற யாராவது நிரப்ப வேண்டும். இங்கிலாந்து தொடர் இன்னும் கடினமாக இருக்கும்.
இந்த எச்சரிக்கை மணிக்கு பின் இந்திய அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.இந்திய அணி இங்கிலாந்தில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications

