IND vs ENG: உலகிலேயே முதல் வீரர்.. அபிஷேக் சர்மா மாபெரும் சாதனை.. முழு விவரம்
துர்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடந்த இந்த ஆட்டத்தில், ஆரம்பகட்ட விக்கெட் சரிவுக்குப் பிறகு இந்திய அணியை அவர் மீட்டெடுத்தார். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த நிலையில், லியாம் டாசன் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா, அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.
டாசன் வீசிய பந்தில் ஒரு இன்சைடு-அவுட் சிக்ஸர், அதைத் தொடர்ந்து மஹ்மூத் பந்துவீச்சில் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள் மூலம் அபிஷேக் சர்மா தனது 100-வது சர்வதேச டி20 சிக்ஸரைப் பதிவு செய்தார். வெறும் 785 பந்துகளிலேயே இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், முழு உறுப்பினர் நாடுகளின் வீரர்களில் மிகக் குறைந்த பந்துகளில் இந்த சாதனையை படைத்த பேட்டர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.இப்பட்டியலில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா 785 பந்துகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் 789 பந்துகளிலும், நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 871 பந்துகளிலும் இந்த இலக்கை எட்டியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து டிம் டேவிட் (931 பந்துகள்), காலின் முன்ரோ (963 பந்துகள்) மற்றும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (1007 பந்துகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதே போன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் சாதனையையும் அபிஷேக் முறியடித்தார். ராகுல் 99 சிக்சர்கள் அடித்த நிலையில், அபிஷேக் 100 சிடகசர் அடித்துள்ளார். இவருக்கு முன்பாக விராட் கோலி 124 சிக்சர்களுடனும், ஹர்திக் 126 சிக்சர்களுடனும், சூர்யகுமார் 179 சிக்சர்களுடனும், ரோகித் சர்மா 205 சிக்சர்களுடனும் உள்ளனர்.
இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு அபிஷேக் சர்மா ரன்களைக் குவித்தார். வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 200-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். இதன் மூலம் 20 பந்துகள் மற்றும் அதற்கு கீழ் மட்டுமே பந்தை எதிர்கொண்டு இதுவரை 5 முறை அரைசதம் எடுத்துள்ளார். இறுதியில் சாம் கர்ரன் பந்துவீச்சில் 24 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். எனினும், அவரது அதிரடியால் 10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எட்டியது.
முன்னதாக, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மேல் வரிசையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
டாஸின் போது பேசிய கேப்டன் ஐயர், இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் களம் இறங்குவதாக தெரிவித்தார். காயத்திலிருந்து மீண்டுள்ள வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருடன் அணியில் இணைந்துள்ளார். எனினும், சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications

