கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 22 அன்று) நடைபெற உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் துவங்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும். 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்த எந்த தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை என்பதால் இந்த தொடரையும் இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. மூன்றாவது போட்டியில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நான்காவது போட்டி புனேவில் நடைபெற உள்ளது. ஐந்தாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஐந்து போட்டிகள் முடிந்த பின் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 அன்று நடக்கும். இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9 அன்றும், மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 அன்றும் நடைபெறும்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்த இரண்டு தொடர்களும் நடைபெறுவதால் இந்திய அணி அந்த தொடருக்கான பயிற்சியாகவே இந்த தொடரை அணுகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முகமது ஷமி நீண்ட காலத்திற்கு பின் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.
ஷமியை பரிசோதிக்கும் வகையிலும், பயிற்சி அளிக்கும் வகையிலும் டி20 தொடரில் அவரை சேர்த்திருக்கிறது இந்திய அணி நிர்வாகம். அவர் டி20 தொடரில் சில போட்டிகளில் பங்கேற்பார். அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.