லீட்ஸ்: ரிஷப் பண்ட் சதம் அடிக்கக் கூடாது, விரைவாக ஆட்டமிழக்க வேண்டும் என நினைத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்த ஒரு விஷயம் அந்த அணிக்கு எதிராகவே மாறியது. ரிஷப் பண்ட் அவர் நினைத்தது போலவே சில ஓவர்கள் கழித்து தனது விக்கெட்டை இழந்தாலும், அதற்கு முன் சரியான தண்டனையை அளித்துவிட்டுதான் சென்றார். மேலும், தனது சதத்தை நிறைவு செய்த பின்னரே அவர் வெளியேறினார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் எடுத்திருந்தன. இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வந்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார்கள்.

ரிஷப் பண்ட் அரை சதம் அடிக்கும் வரை ஆமை வேகத்தில் ஆடினார். ஆனால், அதன் பிறகு அதிரடிக்கு மாறினார். விரைவாக ரன் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் பௌலர்களை பதம் பார்த்தார். இந்த நிலையில் தான் அவர் 90 ரன்களை நெருங்கிய நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார்.
அதாவது, ரிஷப் பண்ட் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அதிக ஸ்வீப் ஷாட்களை ஆடுவார். அப்படி ஆடும் போது சில சமயம் அது தவறாகச் சென்றுவிடும், அப்போது பந்து எட்ஜ் ஆகி கேட்ச் ஆவதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். இதை பயன்படுத்த நினைத்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீரை தொடர்ந்து பந்து வீச வைத்தார்.
மறுமுனையில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான ஜோ ரூட்டை பயன்படுத்தினார். இருவரும் ரிஷப் பண்ட் ஸ்வீப் ஷாட்களை அடிப்பதற்கு ஏற்றவாறு எளிதாகவே பந்து வீசினார்கள். முதலில் ரிஷப் பண்ட் இந்தத் திட்டத்தை உணர்ந்து நிதானமாக ஆடினார். 98, 99 ரன்களை எடுக்கும் வரை அவர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.
ஆனால் சதம் அடித்த பிறகு முற்றிலும் வேறு மாதிரியாக ஆடினார் பண்ட். குறிப்பாக சதம் அடித்ததற்கு அடுத்த ஓவரான 71ஆவது ஓவரில் ஜோ ரூட் பந்துவீச்சில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதில் பைஸ் மூலம் நான்கு ரன்கள் கிடைத்தது போக, 15 ரன்கள் சேர்த்த ரிஷப் பண்ட் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர் அடித்து இருந்தார்.
அதற்கு அடுத்த ஓவரில் சோயப் பஷீர் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் எதிர்பார்த்தது போலவே ஸ்லாக் ஸ்வீப் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பண்ட். ஆனால், அப்போது அவர் 140 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்திருந்தார். அந்த சமயத்தில் இந்திய அணிக்கு விரைவாக ரன் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து திட்டத்தை பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தார் ரிஷப் பண்ட்.
அப்போதே இந்திய அணி 293 ரன்கள் முன்னிலையைப் பெற்றுவிட்டது. இந்தப் போட்டியில் 400 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி திட்டமிட்டு இருந்த நிலையில், ரிஷப் பண்ட் அடித்த கடைசி நேர ஆட்டம் இந்திய அணிக்கு உதவியது.