லீட்ஸ்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது இங்கிலாந்து அணி. இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன.
இதற்கு முன் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக டெஸ்ட் போட்டிகளில் சேசிங் செய்த இலக்கு 378 ஆகும். அந்த இலக்கை இந்திய அணிக்கு எதிராகத்தான் எட்டி இருந்தது இங்கிலாந்து. எனவே, அது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தாலும், இந்தப் போட்டி நடக்கும் ஹெடிங்லே மைதானத்தில் அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் போட்டியில் நேற்று மாலை வேளையில் இந்திய அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இந்தப் பிட்ச் சற்று மந்தமாகி இருப்பதையே அது சுட்டிக்காட்டியது. இந்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் எளிதாக ரன் குவிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கும்.
ஒருவேளை ரிஷப் பண்ட் சதம் அடித்த பிறகு சரமாரியாக அடித்தது போல ஷாட்களை அடித்தால் இங்கிலாந்து அணி ரன் குவிக்கும். அதே சமயம் விக்கெட்டுகளையும் இழக்கும். விக்கெட்டுகளை இழந்தால் அந்த அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு இந்தப் போட்டியில் தோல்வியை நோக்கி செல்லும். இது முதல் சிக்கலாக இருக்கும் நிலையில், மழையால் மற்றொரு சிக்கலும் வர உள்ளது.
இந்தப் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அவ்வாறு மழை வந்தால் சில ஓவர்கள் குறையும். அப்படி நடந்தாலும் வேகமாக ரன் குவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது தவறுகள் செய்து விக்கெட்டுகளை இழக்க நேரிடும். எனவே, இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடும் அணி என்ற பெயர் இருந்தாலும், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 371 ரன் என்ற இலக்கை எட்டுவது மிகவும் கடினமே.
இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா மட்டுமில்லாமல் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அச்சுறுத்தும் வகையில் துல்லியமாக பந்து வீசினாலே இங்கிலாந்து அணி திணறிவிடும். ஆனால், அது நடக்குமா என்பதுதான் இப்போது கேள்வி. பும்ராவை மட்டுமே இந்திய அணி சார்ந்திருக்கிறது.