லீட்ஸ்: இந்திய அணியில் இருந்து ஏற்கனவே சர்பராஸ் கான் நீக்கப்பட்டு இருக்கிறார். தற்போது நிதீஷ் குமார் ரெட்டி உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் வாய்ப்பின்றி ஓரங்கட்டப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன.
இதற்கு முன் அவர் ஆடிய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சதம் அடித்து இருந்தார். இந்திய அணியில் அனுபவ வீரர்களை விட அதிக ரன்களையும் எடுத்து இருந்தார். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பிளேயிங் லெவனில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

ஏனெனில், இங்கிலாந்து மண்ணில் குறைந்தது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. அதேசமயம், இந்திய அணி சமீப காலமாக அதிக பேட்ஸ்மேன்களுடன் ஆட வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆறு பேட்ஸ்மேன்களுடன் இரண்டு ஆல்ரவுண்டர்களாவது இடம் பெற வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.
தற்போது இந்திய அணியில் முதல் ஆறு பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன் அல்லது அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், ரிஷப் பன்ட், கருண் நாயர் ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர். ஏழாம் வரிசையில் ஆல்ரவுண்டரான சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார். எட்டாம் வரிசையில் நிதீஷ் குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்கூர் இடையே யாரை ஆட வைப்பது என்ற போட்டி இருந்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு எதிராகவும், இந்திய அணிக்கு எதிராக நடந்த பயிற்சிப் போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். அவர் விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் சரமாரியாக ரன் குவித்தார். குறிப்பாக, இந்திய அணிக்கு எதிராக நடந்த இன்ட்ரா ஸ்குவாட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார் என்ற தகவல் வெளியானது.
மேலும், பும்ரா மற்றும் முகமது சிராஜுக்கு எதிராகவே அவர் பவுண்டரிகளை அடித்தார் என சுட்டிக்காட்டப்பட்டது. இந்தக் காரணத்தால், நிதீஷ் குமார் ரெட்டியை முந்தி ஷர்துல் தாக்கூர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் எனக் கூறப்படுகிறது.
நிதீஷ் குமார் பயிற்சிப் போட்டியிலும், இன்ட்ரா ஸ்குவாட் போட்டியிலும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். மேலும், பந்துவீச்சில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதுதான் அவருக்கு எதிராக மாறியுள்ளது.
ஏனெனில், நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அவரைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அவர் விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் உடையவராகவும், பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும். அது இரண்டும் அவரிடம் இல்லை என்பதுதான் அவருக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே, நிதீஷ் குமார் ரெட்டி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.