லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ரிஷப் பண்ட் இன்னும் 267 ரன்கள் அடித்தால் தோனியின் ஒரு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இங்கிலாந்து மண்ணில் புதிய சாதனை ஒன்றையும் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் ரிஷப் பண்ட். இதற்கு முன் இங்கிலாந்தில் அவர் சிறப்பாக விளையாடிய சில இன்னிங்ஸ்களும் உள்ளன. இந்த நிலையில் தான், தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

தோனி இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த எதிரணி விக்கெட் கீப்பர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் இங்கிலாந்து மண்ணில் 778 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் ரிஷப் பண்ட் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். அவர் இன்னும் 267 ரன்கள் எடுத்தால் தோனியின் சாதனையைச் சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் 289 ரன்களை எடுத்தால், இந்தப் பட்டியலில் 800 ரன்கள் எடுத்த முதல் எதிரணி விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.
இந்த முறை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகளில் விளையாட இருப்பதால், ரிஷப் பண்ட் இந்தச் சாதனைகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்த முறை இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு மூத்த வீரர்கள் இடம் பெறவில்லை. எனவே, ரிஷப் பண்ட்டுக்கு கூடுதல் பொறுப்பும் இருக்கிறது. அவரே முன்நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும் நிலை உள்ளது. ரிஷப் பண்ட் பொறுப்பாக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் தனது தனித்துவமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருவாரா அல்லது புதிய சாதனைகளைப் படைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.