மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே அபாரமாக சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இதை அடுத்து அவருக்குப் பாராட்டு மழை குவிந்து வருகிறது. யுவராஜ் சிங் தனிப்பட்ட முறையில் பதிவு ஒன்றை வெளியிட்டு உச்சி முகர்ந்து இருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி இதுவரை பேட்டிங் செய்து வந்த நான்காம் வரிசையில் சுப்மன் கில் பேட்டிங் செய்தார். விரைவாக ரன் சேர்த்த அவர் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 127 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டனாக தனது முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதை அடுத்து, அவர்தான் இனி புதிய 'கிங்' என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன் விராட் கோலியை அரசன் என பொருள்படும்படி ஆங்கிலத்தில் "கிங்" என்றும், சுப்மன் கில்லை இளவரசன் என சொல்லும் வகையில் ஆங்கிலத்தில் "பிரின்ஸ்" என்றும் அழைத்து வந்தனர். தற்போது கோலி ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் இனி கில் தான் புதிய அரசன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம், அவரது ஆலோசகராக சில ஆண்டுகள் முன்பு வரை செயல்பட்டு வந்த யுவராஜ் சிங், அவரைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், "சில விஷயங்கள் நட்சத்திரத்தில் முன்பே எழுதப்பட்டு விட்டன. சுப்மன் கில், டெஸ்ட் கேப்டனாக உனது முதல் வெளிநாட்டுப் போட்டி சதத்தை அடித்ததற்கு வாழ்த்துகள். இது எந்த அளவுக்கு முக்கியமான ஒரு பொறுப்பு என்பதை நீ உணர்ந்து கொண்டிருக்கிறாய். மேலும் உனது பேட் இங்கே பேசியிருக்கிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்" என வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருந்தார். கே.எல். ராகுல் 42 ரன்கள் சேர்த்திருந்தார். சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருந்தார். ரிஷப் பண்ட் ஐந்தாம் வரிசையில் இறங்கி 65 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கில் மற்றும் பண்ட் ஆட்டமிழக்காமல் இருக்கும் நிலையில், இரண்டாம் நாள் அன்று இந்திய அணி விரைவாக ரன் சேர்த்து 500 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கலாம்.