விசாகப்பட்டினம் : இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியில் ஒருநாள் முழுக்க ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் பயிற்சி மேற்கொண்டது குறித்து ஜாகீர் கான் ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். குறிப்பாக கிராலி, பென் டக்கெட் மற்றும் போப் மூவரும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் மூலமாக இந்திய ஸ்பின்னர்களை அச்சுறுத்தினார்கள் என்றே கூறலாம். அதன் காரணமாக டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய பின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற அணுகுமுறைக்கு மனதளவில் மட்டுமல்லாமல் எதிரணியின் பலத்தை அறிந்து தயாராகி வந்தது தெரிய வந்தது. ஸ்பின்னர்களை எதிர்த்து ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினால் அவர்களால் அட்டாக் செய்ய தயங்குவார்கள் என்பதோடு, அந்த ஷாட்களை துல்லியமாக விளையாட தீவிரமாக திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின் 2வது டெஸ்ட் போட்டிக்கு தீவிரமாக தயாராகியது. அதிலும் பேட்ஸ்மேன்கள் தரப்பில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அதிகமாக பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுக்கு இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் பவுலிங் செய்தனர்.
இது பேட்ஸ்மேன்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியாக பார்க்கப்பட்டது. இதுகுறித்து 2வது டெஸ்ட் போட்டிக்கு முன் பீட்டர்சன் பேசுகையில், இந்திய வீரர்களும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஷாட்களை பயிற்சி செய்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. புதிய புதிய ஷாட்களை விளையாட கற்றுக் கொண்டால் தான் பேட்ஸ்மேன்களின் வளர்ச்சியும், டெஸ்ட் கிரிக்கெட்டும் கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறினார்.
அப்போது அருகில் இருந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான், இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு போட்டியில் தங்களது பேட்டிங் ஸ்டைலை மாற்ற வாய்ப்பில்லை. அது பேட்ஸ்மேன்களுக்கான பயிற்சியாக நான் பார்க்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஆடும் போது எப்படி பவுலிங் செய்யலாம் என்று இந்திய ஸ்பின்னர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியாக பார்ப்பதாக தெரிவித்தார். இதனால் சில நொடிகள் பீட்டர்சன் மிரண்டுவிட்டார்.