விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் பும்ரா 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் பந்து போப் கொடுத்த கேட்சையும் கேஎல் ராகுல் தவறவிட்டார். கேப் டவுனில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை கொத்து கொத்தாக வீழ்த்திய சிராஜ், சொந்த மண்ணில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முகேஷ் குமாரை விடவும் முகமது சிராஜ் மிகச்சிறந்த பவுலராக இருந்தும், என்ன காரணத்திற்காக அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்று ரசிகர்கள் குழம்பினர்.
இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் சிராஜ் நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர் அடுத்ததாக ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார். அவருக்கு மாற்றாக இந்திய அணியின் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனியர் வீரர்களான விராட் கோலி, முகமது ஷமி, கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்டோர் இந்திய அணியில் இல்லாத நிலையில், சிராஜ்-க்கு ரெஸ்ட் கொடுத்தது தேவையில்லாத முடிவு என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.