விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பிட்ச் ரிப்போர்ட் மற்றும் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கம்பேக் கொடுக்க தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனியர் வீரரான விராட் கோலி ஏற்கனவே விலகிய நிலையில், தற்போது காயம் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரும் விலகியுள்ளனர்.

இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஜத் பட்டிதர், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய 4 பேரில் யார் யாருக்கு 2வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற விவாதம் அதிகரித்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ரன்களை கட்டுப்படுத்தி அழுத்தத்தை கொடுக்கும் ஆஃப் ஸ்பின்னரான ஜாக் லீச் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சோயப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் மைதானம் பிளாக் சாயில் (Black Soil) பிட்சாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிட்சில் நல்ல ஸ்பின் இருக்கும் என்றாலும், தூசி வரும் அளவிற்கு டர்ன் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியையும், 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியையும் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.
அதேபோல் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விளையாடினால் ஐதராபாத் பிட்சை போல் சிறந்த ஸ்கோரை இரு அணிகளும் பதிவு செய்யலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் குவித்து இன்னிங்ஸை வெற்றியை பதிவு செய்தது. அன்றைய ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட 31 விக்கெட்டுகளில் 22 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களால் வீழ்த்தப்பட்டது. இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே அதிகமாக விரும்பும். இந்த மைதானத்தில் முதல் 2 நாட்களுக்கு பேட்டிங் செய்வதற்கான நல்ல சூழல் இருக்கும். ஆனால் வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் விசாகப்பட்டினம் பிட்ச் எப்படி மாறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடிய கேஎஸ் பரத், ரஜத் பட்டிதர் உள்ளிட்டோர் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.