மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் XI-ல் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அணி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கும் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி கோப்பையைத் தக்கவைக்க இன்னும் இரு வெற்றிகளே தேவைப்படுகின்றன. எனினும், முதலில் அரையிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியைக் கடக்க வேண்டும்.

ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, தொடரில் போக போக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக திரில் வெற்றிகளைப் பெற்று, அனைத்து மூன்று போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தொடர்ச்சியாக மோதும் மூன்றாவது T20 உலகக் கோப்பை அரையிறுதி ஆகும்.

கடைசியாக இந்த இரு அணிகளும் டி20 உலககோப்பை தொடரில் மோதியபோது, ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார், அப்போது இந்தியா ஒரு பெரிய வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி வலுவான ஃபார்மில் உள்ள நிலையில், இந்திய அணியின் பயணத்தில் கொஞ்சம் பலவீனமாகத் தெரிகிறது. முதல் சுற்றில் நான்கு போட்டிகளிலும் வென்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட, அவர்களின் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் 76 ரன் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி ஒரு பெரும் பாடமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து கிடைத்த இரண்டு வெற்றிகள், மீண்டும் அணியை பாதைக்குக் கொண்டுவர உதவியது.இந்திய அணிக்கு சில கவலைகள் உள்ளன. இதில் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் சரிவு, சிவம் துபே ரன்களை வாரிவழங்குவதால் ஆறாவது பந்துவீச்சுத் தேர்வு கிடைக்கவில்லை,
மேலும், எளிதான கேட்ச்களை நழுவவிடுவது ஆகியவை அடங்கும். இத்தகைய தவறுகள் நாக்அவுட் போட்டிகளில் தோல்வியைத் தரக்கூடும். மும்பையின் வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இப்போட்டிக்காக அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.அபிஷேக் சர்மா உலகின் நம்பர் 1 T20I பேட்ஸ்மேனாக இருந்தாலும், இந்த உலகக் கோப்பையில் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை. ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று டக் அவுட்களுடன் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு அரைசதம் அடித்துப் பார்முக்கு திரும்புவது போல் தோன்றினாலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 10 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சந்தேகங்களை எழுப்பினார். ஒரு ஓப்பனராக உலகக் கோப்பையில் இத்தகைய செயல்பாடு, அணி நிர்வாகம் அவரை பெஞ்சில் அமர்த்துவது போன்ற கடுமையான முடிவை எடுக்கத் தூண்டலாம்.
அணி ஏற்கனவே பேட்டிங் வரிசையில் மாற்றங்களைச் செய்துள்ளது: இஷான் கிஷனை 3வது இடத்திற்கு இறக்கி, சஞ்சு சாம்சனை அபிஷேக்குடன் ஓப்பனராகவும், திலக் வர்மாவை கீழே தள்ளியும் இறக்கியுள்ளனர். அபிஷேக் பெஞ்சில் அமர்த்தப்படுவாரா, அல்லது இஷானுக்கு தொடக்க இடம் மாறுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக அபிஷேக் செய்த சாதனைகளைக் கருத்தில் கொண்டு, அணி மீண்டும் மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை.குறிப்பாக, 2025 பிப்ரவரியில் வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச T20I ஸ்கோருக்கான சாதனையை படைத்தவர் அபிஷேக் சர்மா தான். இப்போட்டியில் அவர் மீண்டும் அதேபோன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா வெற்றிப்பாதைக்குத் திரும்பிவிட்டதால், அதே அணியுடன் களமிறங்கவே விரும்பலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இருப்பினும், இந்திய பந்துவீச்சு சற்று விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக 176, ஜிம்பாப்வேக்கு எதிராக 184, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 195 ரன்களை விட்டுக்கொடுத்தது. குல்தீப் யாதவை மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி செய்தால், யாருக்குப் பதிலாக? ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளனர். அக்சர் படேல் நீக்கப்பட்டால், அது பேட்டிங்கை பலவீனமாக்கும். எனவே, இந்தியா மாற்றமில்லாத பதினோரு வீரர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரையிறுதிப் போட்டிக்கான இந்தியாவின் உத்தேச ப்ளேயிங் XI: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.