கட்டாக்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. அதில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டாவது போட்டி எப்போது நடைபெறும்? அந்தப் போட்டி நடைபெறும் தேதி, நேரம் மற்றும் மைதானம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை, (நாளை) பிப்ரவரி 9, 2025 அன்று கட்டாக்கில் உள்ள பாரபத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. 1 மணிக்கு டாஸ் போடப்படும்.

கிட்டத்தட்ட 45,000 இருக்கைகள் கொண்ட பாரபத்தி மைதானம், கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாகத்திற்கு பெயர் பெற்றது. இங்கு இதற்கு முன்னரும் பல முக்கியமான போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு, தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன் நடக்கும் இந்தத் தொடர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஒரு முக்கியமான பயிற்சியாக அமைந்து இருக்கிறது. பிப்ரவரி 6, 2025 அன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு சுப்மன் கில் 87 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் சேர்த்து முக்கிய பங்காற்றினர். இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகிய இருவரும் அரை சதங்கள் அடித்தும், அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக, இரண்டு அணிகளும் தங்களது உத்திகளையும், ஆட்டத் திறனையும் மேம்படுத்திக் கொள்ள இந்தத் தொடர் உதவும். கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.