கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய அணி வென்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி அதிரடியாக ரன் சேர்த்தது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும் 304 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் 65 ரன்கள் எடுத்திருந்தார். அனுபவ வீரர் ஜோ ரூட் 69 ரன்கள் சேர்த்திருந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் 10 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து 305 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி ஆடத் தொடங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் இருவரும் அதிரடி ஆட்டம் ஆடியதால் இங்கிலாந்து அணி அப்போதே நிலை குலைந்தது.
சுப்மன் கில் 52 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். 9 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். விராட் கோலி ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு புறம் ரோஹித் சர்மா சரமாரியாக பவுண்டரிகளை அடித்து 30 பந்துகளில் அரை சதத்தையும், 76 பந்துகளில் சதத்தையும் கடந்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் சேர்த்தார்.
ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 41 ரன்கள் சேர்த்தார். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 10 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தனர். 44.3 ஓவர்களில் இந்திய அணி 338 ரன்களை எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி விரைவாக சேசிங்கை முடித்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து அணியில் ஏழு பந்துவீச்சாளர்கள் பவுலிங் செய்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.