கட்டாக்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் ஒருநாள் தொடரில் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளார். இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளிலும் அவர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தையும் அவர் செய்திருக்கிறார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்கள் எடுத்தது. இரண்டாவது போட்டியில் 304 ரன்கள் எடுத்தது. இந்த அளவுக்கு இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டபோதும், ஜடேஜா இரண்டு போட்டிகளிலும் சேர்த்து தான் வீசிய 19 ஓவர்களில் 2 பவுண்டரிகளை மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். இது அசாதாரணமான செயல்பாடாக அமைந்தது.

முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்த ஜடேஜா ஒரு மெய்டனையும் வீசி மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இரண்டாவது போட்டியில் 10 ஓவர் வீசி 35 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் இந்த போட்டியில் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இத்துடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் விக்கெட்டை 13வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஜோ ரூட்டின் விக்கெட்டை ஐந்தாவது முறையாக கைப்பற்றினார் ரவீந்திர ஜடேஜா.
இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஜடேஜா 19 ஓவர்களில் 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது பௌலிங் சராசரி 10.16 என்பதாகவும், எக்கனாமி 3.21 என்பதாகவும் உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முன்னோட்டமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா சரியான நேரத்தில் தனது உச்சகட்ட ஃபார்மை எட்டி இருக்கிறார். அவரது சிறப்பான பந்துவீச்சுக்கு மத்தியில் இந்திய அணி இங்கிலாந்தை 2 - 0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.