கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விவாதித்து வருகின்றனர்.
ஆனால் அவர் இந்திய அணியின் மிக முக்கியமான தனித்துவமான வீரராக இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் நிகழ்வு ஒன்று 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்தது. அப்படி ஒரு வீரரை தான் இந்திய அணி நிர்வாகம் பத்தோடு பதினொன்றாக வைத்து நடத்துகிறது என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதின. அந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த ஆஸ்திரேலியா அணி திட்டமிட்டது. அப்போது விராட் கோலி, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய நால்வரும் இருந்த மிடில் ஆர்டரில் அவர்களை விடுத்து ஸ்ரேயாஸ் ஐயரை வீழ்த்த மட்டும் ஆஸ்திரேலியா அணி சிறப்பு திட்டங்களை வகுத்தது.
ஏனெனில், அந்த இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானம் மந்தமானது. அந்த சூழ்நிலையில் இந்த நான்கு பேட்ஸ்மேன்களும் நிதானமாக ரன் சேர்ப்பார்கள் அல்லது ரன் எடுக்க முடியாமல் திணறுவார்கள் என்பதை ஆஸ்திரேலியா அணி அறிந்து இருந்தது.
ஆனால் அந்த சூழ்நிலையில் ஆட்டத்தை மாற்றும் திறமை ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டுமே உள்ளது என்பதை அவர்கள் கணித்து இருந்தனர். அதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தவுடன் வீழ்த்தி விட வேண்டும் என திட்டமிட்டனர். அதேபோல அந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை பாட் கம்மின்ஸ் வீழ்த்தி இருந்தார். இந்த திட்டம் தொடர்பாக அப்போது கிரிக்கெட் தளம் ஒன்றில் சிறப்பு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.
இப்படி மாறுபட்ட திறமை உடைய ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு பலமான ஒரு விஷயமாகவே இருக்கும். மேலும் நான்காம் வரிசையில் அவர் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி நான்காம் வரிசையில் 50க்கும் மேல் உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 100க்கும் மேல் உள்ளது.
எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அவர் ரன் குவிக்க ஆரம்பித்தால் நிச்சயமாக 50 ரன்கள் எடுத்து விடுகிறார். எனவே விராட் கோலி, கே.எல். ராகுல், சுப்மன் கில் போன்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக ஆடும் பேட்ஸ்மேன்கள் இருக்கும் இந்திய பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற மாறுபட்ட ஆட்டம் ஆடும் ஒருவர் இருப்பது அவசியம்.
இதை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்தில் எடுத்துக் கொள்வாரா, ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு அளிப்பாரா? என்று பார்க்கலாம். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்த முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.