கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டெடுத்தார். இது குறித்து சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். பாராட்டுவதற்காக வெளியிடப்பட்ட அந்த பதிவு தேவையற்ற சர்ச்சையாக மாறியது.
ரோஹித் சர்மாவின் சதத்தைக் குறிப்பிட்டு "நல்லவர்களுக்கு நல்லது நடக்கும், கடவுள் மிகச் சிறந்தவர்" எனக் குறிப்பிட்டிருந்தார் சூர்யகுமார் யாதவ். இதற்கு வேறு ஏதேனும் அர்த்தம் உள்ளதா என ரசிகர்கள் உடனடியாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். விராட் கோலி இந்தப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதனுடன் சிலர் முடிச்சு போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

சில மாதங்களாக ரோஹித் சர்மாவை அணியிலிருந்து நீக்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகளும், வதந்திகளும் பரவி வருகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவர் தாமாக விலகினாரா அல்லது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியிலிருந்து நீக்கினாரா என்ற சர்ச்சை அப்போது எழுந்தது.
அப்போதிருந்து கௌதம் கம்பீருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே விரிசல் இருப்பதாக ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் சூர்யகுமார் யாதவின் இந்த பதிவு உள்நோக்கத்துடன் பதிவிடப்பட்டிருப்பதாக விவாதம் எழுந்துள்ளது. ரோஹித் சர்மாவை பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்திய அணியில் நடக்கும் ஏதோ ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சிலர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகப் பதிவிட்டு "மும்பை லாபி என்பதை சூர்யகுமார் நிரூபிக்கிறார்" எனவும், "டி20 அணியின்
கேப்டன் பதவிக்காக இதுபோல பேசுகிறார்" எனவும் கூறினர். வேறு சிலர் "ரோஹித் சர்மா நல்லவர் என்பதால் சதம் அடித்தார் என்றால், சரியாக விளையாடாமல் இருக்கும் விராட் கோலி நல்லவர் இல்லையா?" என பதிலுக்கு கேள்வி கேட்டு சர்ச்சையைக் கிளப்பி உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி 304 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் எளிதாக வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். இது அவரது 32வது ஒருநாள் போட்டி சதமாக அமைந்தது.
விராட் கோலி இந்த போட்டியில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் சூர்யகுமார் யாதவின் பதிவு விராட் கோலியை சீண்டுகிறதா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.