கட்டாக்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் வருண் சக்கரவர்த்தி அறிமுகம் பெற்றுள்ளார். இதுவே அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். இதன் மூலம் அவர் 51 ஆண்டு கால சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு இந்திய அணி முதன் முதலாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அப்போது இந்திய அணியில் அதிக வயதுடைய வீரர்கள் ஒரே நேரத்தில் அறிமுகமானார்கள். ஃபரூக் இன்ஜினியர் 36 வருடம் 138 நாட்களிலும், அஜித் வடேகர் 33 வருடம் 103 நாட்களிலும் அறிமுகமாகி இருந்தனர். அதே போட்டியில் தான் சையத் அபித் அலி 32 வருடம் 37 நாட்களில் அறிமுகம் ஆனார்.

தற்போது வருண் சக்கரவர்த்தி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் அவரது வயது 33 வருடம் 164 நாட்களாக உள்ளது. இதன் மூலம் அதிக வயதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. 51 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இந்திய அணியின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு பிறகு இப்போது தான் அதிக வயதுடைய வீரர் ஒருவர் அறிமுகம் பெற்று இருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக வருண் சக்கரவர்த்தி டி20 போட்டிகளில் விக்கெட் வேட்டையாடி வந்தது தான். ஐபிஎல் தொடரிலும், கடந்த ஆண்டு முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளிலும் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவர் கடைசியாக ஆடிய 12 டி20 போட்டிகளில் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதன் காரணமாகவே அவருக்கு தற்போது ஒருநாள் போட்டியில் இடம் கிடைத்து இருக்கிறது. அதிலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் அவர் இடம் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தனது முதல் போட்டியில் ஆடிய வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.