கட்டாக் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டியை வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் சரியான திசையில் செல்ல முயற்சி செய்து வருகிறோம். நீண்ட நேரம் களத்தில் செலவிட்டு ரன்கள் சேர்க்க வேண்டும். நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொத்தாக விக்கெட்டுகளை இழக்கின்றோம்.
இதை நாங்கள் சரி செய்ய வேண்டும். எங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.ஜிம்மி ஓவர்டன், மார்க் வுட், பிரைடன் கார்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்ப இருக்கிறார்கள் என்று பட்லர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கடந்த போட்டியில் அணியின் செயல்பாடு திருப்தியை கொடுத்தது.
அணியில் உள்ள வீரர்களின் எனர்ஜி எனக்கு பிடித்திருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்த பிறகும் ஸ்ரேயாஸ், கில் ஆகியோர் கவுண்டர் அட்டாக் இன்னிங்ஸ் ஆடி வெற்றி பெற வைத்தார்கள். களத்தில் எது நடந்தாலும் இப்படி அதிரடியாக ஆடும் வீரர்கள் அணிக்கு நிச்சயம் தேவை.இதை செய்வதில் ஸ்ரேயாஸ் பெருமை கொள்கின்றார் .இப்படி தான் விளையாட வேண்டும் என அவர் நினைக்கின்றார்.
இதேபோன்று கில் ஆட்டத்தையும் நாம் மறந்துவிட முடியாது. அக்சர் பட்டேலும் கடந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். தற்போது கட்டாக்கில் களிமண், ஆடுகளத்தில் கலக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடுகளம் தோய்வாக மாறும் என நினைக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக விராட் கோலி குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியும் அணிக்கு திரும்ப இருக்கிறார்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.