சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று எழுந்து இருக்கிறது. இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
பயிற்சியின்போது அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய அணியில் மாற்று துவக்க வீரர் என யாரும் இல்லை. எனவே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருவர் துவக்க வீரராக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து அதிரடி ஆட்டம் ஆடி இருந்தார். எனவே, அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பது பின்னடைவாக அமைந்து இருக்கிறது. அபிஷேக் சர்மாவுக்கு மாற்றாக இரண்டு வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு மட்டுமே உள்ளது.
முதல் போட்டியில் இடம் பெறாத நான்கு வீரர்களில் இருவர் மட்டுமே பேட்ஸ்மேன்கள். வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரல் தான் அந்த இருவர். இவர்கள் இருவரில் வாஷிங்டன் சுந்தர் துவக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளது. அணியில் ஏற்கனவே, ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் நான்காவதாக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ய தயங்கினால் துருவ் ஜுரலை அணியில் தேர்வு செய்யலாம்.
துருவ் ஜுரல் துவக்க வீரராக ஆட சரியான தேர்வு இல்லை என்பதால் அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார். சூர்யக்குமார் யாதவ் அல்லது திலக் வர்மா துவக்க வீரராக களம் இறங்குவார்கள். இந்த இரண்டு வாய்ப்பு மட்டுமே இந்திய அணியில் கைகளில் உள்ளது. மாற்று துவக்க வீரர்களாக யாரையும் தேர்வு செய்யாதது இந்த சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாற்றத்துக்குப் பின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் (அ) துருவ் ஜூரல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.