சென்னை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதல் டி20 போட்டியில் புகைமூட்டம் காரணமாக இங்கிலாந்து வீரர்களால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என கூறி இருந்தார். தோல்விக்கு அவர் சப்பை கட்டு கட்டி இருந்தது வியப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இப்படி ஒரு காரணத்தை கூறி இருந்தார்.
முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதில் ஹாரி புரூக்கின் விக்கெட்டும் ஒன்று. அந்தப் போட்டியில் ஹாரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நடந்த சென்னை சேப்பாக்கத்தில் புகைமூட்டம் இல்லை என்பதால் சிறப்பாக ஆடுவோம் எனவும் ஹாரி புரூக் தெரிவித்து இருந்தார்.

ஆனால், சேப்பாக்கம் போட்டியிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 45 ரன்கள் சேர்த்தார்.
அவருக்கு அடுத்து அதிகபட்சமாக ஆல் ரவுண்டரான பிரைடன் கார்ஸ் 31 ரன்கள் எடுத்து இருந்தார். ஹாரோ புரூக் 13 ரன்கள் எடுத்து மீண்டும் வருண் சக்கரவர்த்தியின் பந்தில் ஆட்டமிழந்து இருந்தார். இந்த முறை ஹாரி பவுல்ட் அவுட் ஆகி இருந்தார். அவர் அவுட் ஆன உடன் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் மைக்கேல் வாகன் அவரை கிண்டல் செய்தனர்.
ஹாரி புரூக் ஆட்டமிழந்த போது வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்திரி, "மீண்டும் வருண் சக்கரவர்த்தி தான் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இப்போது எந்த புகைப்படம் இல்லை. ஆனாலும் பந்து உள்ளே சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது." என்றார்.
சுனில் கவாஸ்கர் இது பற்றி பேசுகையில், "வருண் சக்கரவர்த்தி ஹாரியை பார்த்து இப்போது எந்த புகை மூட்டமும் இல்லையே என கேட்பது போல உள்ளது." என்றார். மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னையில் புகைமூட்டம் அதிகமாக உள்ளதா? சும்மா கேட்கிறேன்." என்று கிண்டலாக பதிவு செய்து இருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி நிர்ணயத்தை 166 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.