சென்னை: சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய மைல்கல் சாதனையை செய்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர். இந்தியா மற்றும் இங்கிலாந்தின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் 68 ரன்கள் குவித்து இருந்தார். இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் ஜோஸ் பட்லர் அபாரமாக ஆடி 45 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்த நிலையில் ஜோஸ் பட்லர் மட்டுமே சிறப்பாக ஆடி இருந்தார். இதை அடுத்து இந்திய அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் 600 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை செய்தார் ஜோஸ் பட்லர்.
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் இந்திய அணிக்கு எதிராக 592 ரன்கள் சேர்த்து இருந்ததே சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து தற்போது 611 ரன்கள் சேர்த்து இருக்கிறார் ஜோஸ் பட்லர்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் -
ஜோஸ் பட்லர் - 611 ரன்கள்
நிக்கோலஸ் பூரன் - 592 ரன்கள்
கிளென் மேக்ஸ்வெல் - 574 ரன்கள்
டேவிட் மில்லர் - 524 ரன்கள்
ஆரோன் பிஞ்ச் - 500 ரன்கள்
இரண்டாவது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் 45 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 166 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் எட்டியது.