சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தாங்கள் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினர். சுந்தர் மற்றும் வருண் பந்தை எடுத்தாலே விக்கெட் தான் என நிரூபித்துக் காட்டினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக வீரர்கள் இருவரும் தங்களின் முதல் ஓவரிலேயே விக்கெட்களை வீழ்த்தியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த தொடரின் முதல் போட்டியை போல இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார்.
ஆனால், மறுபுறம் இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையாக விக்கெட்டுகளை சாய்த்தனர். முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் துவக்க வீரர் ஃபில் சால்ட்-இன் விக்கெட்டை சாய்த்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் நான்காவது ஓவரில் முதன்முறையாக பந்து வீச வந்தார். அப்போது அந்த ஓவரின் முதல் பந்திலேயே பென் டக்கெட் விக்கெட்டை சாய்த்தார்.

அதேபோல ஏழாவது ஓவரில் முதன்முறையாக வருண் சக்கரவர்த்தி பந்து வீச வந்தார். அவர் ஹாரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தினார். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் இரண்டு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்து இருந்தார். அக்சர் பட்டேல் வீசிய பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஜோஸ் பட்லர்.
அதன் பின் அக்சர் பட்டேல், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா என இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையாக விக்கெட்களை வீழ்த்தினர். அப்படி இருந்தும் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டம் ஆடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்ற போதும் 19.2 ஓவரில் வெற்றி பெற்றது.
திலக் வர்மா தனி ஆளாக சேஸிங்கை கையில் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.