பிர்மிங்காம்: இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஹாரி ப்ரூக், இந்திய அணி என்ன பெரிய இலக்கை நிர்ணயம் செய்தாலும் அதை எதிர்கொள்ள முயற்சிப்போம் என்று வீரமாகப் பேசியிருந்தார். உலகில் உள்ள அனைவருக்கும் இது தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து, 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி, மொத்தமாக 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்தது.

இவ்வளவு பெரிய இலக்கை துரத்துவது கடினம் என்ற நிலையில், இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோத்திக், ஹாரி ப்ரூக்கின் பேச்சுக்கு நேர்மாறாகப் பேசியிருக்கிறார். அதாவது, இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்தாலே அது நல்ல முடிவு என்று பல்டி அடித்து இருக்கிறார்.
மார்கஸ் ட்ரெஸ்கோத்திக் பேசியதாவது: "நாங்கள் எங்களால் முடிந்த அளவு நேர்மறையாக இருக்க முயற்சிப்போம். இது நிச்சயம் சேஸிங் செய்வதற்கு மிகவும் அதிக ஸ்கோர் ஆகும். நாளை 550 ரன்கள் வரை நாங்கள் எடுக்க வேண்டும். ஒரே நாளில் அத்தனை விரைவாக ரன் சேர்க்கும் அளவுக்கு ஆட முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. அது நிச்சயம் சவாலானதாக இருக்கும்.
மேலும், பந்து பழையதாவதற்கு மேலும் 10 முதல் 15 ஓவர்கள் ஆகும். அது கடினமான ஒன்றாக இருக்கும். அங்கிருந்து நாங்கள் எப்படி ஆடப் போகிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். சூழ்நிலை மாறும்போது முடிவையும் மாற்ற வேண்டியது இருக்கும். இந்தப் போட்டியை டிரா செய்ய முடியும் என்றால் அதை யோசிக்க வேண்டும்.
வெற்றி அல்லது தோல்வியை மட்டும்தான் அடைவோம் என சொல்வதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் மூன்று விதமான முடிவுகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. எங்கள் காலத்தில் நாங்கள் வேறு மாதிரியாக செய்தோம். இப்போது வேறு மாதிரியான ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது," என்று கூறினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் டிரா செய்ய முயற்சிக்கப் போகிறது என்பது தெரியவந்துள்ளது. இனியும் இங்கிலாந்து அணி வீராப்பாக 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை ஆடுவோம் என சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதையே இந்த சூழ்நிலை சுட்டிக்காட்டுகிறது.
அதே சமயம், இங்கிலாந்து அணி நான்காவது நாள் முடிவில் 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது. எனவே, அந்த அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு டிரா செய்வதும் சவாலான விஷயமாகவே இருக்கும்.