பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. ஆனால், மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்திய அணியில் 'தமிழ்நாடு கோட்டா' என்று அறிவிக்கப்படாத ஒரு கட்டுப்பாடு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியில் ஒரு நேரத்தில் ஒரு தமிழக வீரர் மட்டுமே விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும் விதிக்கப்பட்டுள்ளதா என தோன்றும் வகையில் சில விஷயங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பாதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற பிறகு, அதே தொடரில் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. ஆனால், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார்.
முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் சிறப்பாகச் செயல்படாத நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சாய் சுதர்சனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திடீரென இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சாய் சுதர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதை அடுத்து, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு தமிழக வீரருக்கு மட்டும்தான் இடம் என்ற அறிவிக்கப்படாத கட்டுப்பாடு இருக்கிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது.
நீண்ட காலத்திற்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் ஒரே நேரத்தில் முரளி விஜய் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என இரண்டு தமிழக வீரர்கள் ஒன்றாக விளையாடியுள்ளனர். அதன் பிறகு, 'இந்த அறிவிக்கப்படாத விதி' இருப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து மொத்தமே நான்கு போட்டிகளில் மட்டுமே ஒன்றாக விளையாடியுள்ளனர். அப்போது அஸ்வினை தவிர வேறு ஒரு தமிழக வீரர் இந்திய அணியில் ஆடும் திறனுடன் இல்லை என்று கூறப்படும் ஒரு வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ஒன்றாக ஆட வைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இன்னும் சொல்லப் போனால் அந்த தொடரில் அஸ்வின் ஓய்வு பெற்றதே அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் வந்ததால் தான் என்ற எண்ணம் உள்ளது. அஸ்வின் ஓய்வு பெற்ற பின் தனது இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர் வந்து விட்டதாக அவருக்கு வாழ்த்துக்கள் கூறி இருந்தார்.
இதை வைத்து பார்த்தால் மறைமுகமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு தமிழக வீரர் மட்டும் தான் விளையாட வேண்டும் என்பது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். சாய் சுதர்சனுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டாவது முறையாக வாய்ப்பு அளித்திருக்கலாம்,
ஆனால் வாஷிங்டன் சுந்தர் என்ற மற்றொரு தமிழக வீரரை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே சாய் சுதர்சனை நீக்கியது போலத் தோன்றுகிறது. இதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. பும்ரா, சாய் சுதர்சன், மற்றும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், மற்றும் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.