பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே அவர் அறிமுகமான நிலையில், இரண்டாவது போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பலரும் விடை தேடுகின்றனர்.
முதல் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், அறிமுக வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சாய் சுதர்சனின் இடத்தில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த கருண் நாயர், மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இதுதான் சாய் சுதர்சன் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கருண் நாயர் பொதுவாக மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்யக் கூடியவர். துவக்க வீரராகவும் ஆடியிருக்கிறார்.
ஆனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் தான் களம் இறங்கினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் துவக்க வீரர்களாக இருக்கும் நிலையில், மூன்றாம் வரிசையில் சாய் சுதர்சனும், நான்காம் வரிசையில் சுப்மன் கில்லும் பேட்டிங் செய்தனர்.
ஐந்தாவது வரிசையில் ரிஷப் பண்ட் களம் இறங்குகிறார். எனவே, இந்த பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய முடியாததால், கருண் நாயருக்கு ஆறாம் வரிசையில் தான் இடம் கிடைத்தது. சாய் சுதர்சன் இதற்கு முன்பு மிடில் ஆர்டரில் விளையாடியது இல்லை.
இந்த நிலையில், கருண் நாயருக்கு அவருக்குச் சாதகமான இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், சாய் சுதர்சனை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும், பின்வரிசையில் ஆல்ரவுண்டர்களை சேர்க்கலாம் என்ற திட்டமும் இருந்ததால், இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, சாய் சுதர்சன் நீக்கப்பட்டு, மூன்றாம் வரிசையில் கருண் நாயர் களமிறங்கினார். ஆறாவது வரிசையில் ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டார்.
ஆனால், இந்தத் திட்டம் பெரிய அளவில் வேலை செய்யவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆறாம் வரிசையில் இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், இந்த முதல் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும், சுப்மன் கில் 114 ரன்களும் எடுத்து அசத்தினர். சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.