பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நிர்ணயிக்கப் போகும் இலக்கை பற்றி இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 371 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயம் செய்திருந்தது. அதை இங்கிலாந்து அணி எட்டாது என நினைத்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அந்தப் பெரிய இலக்கை எட்டி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் அதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், மூன்றாவது நாளின் முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 64 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் இழந்து இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியால் மேலும் 150 ரன்கள் சேர்க்க முடியும் என்று வைத்துக் கொண்டாலும், இங்கிலாந்து அணிக்கு 400 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த சூழ்நிலையிலும் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் நம்பிக்கையாகப் பேசினார். அதிலும் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடும் வகையில், "எத்தனை பெரிய இலக்கையும் எட்டுவோம்," என்று பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், "உலகில் இருக்கும் அனைவருக்கும் தெரியும், இந்திய அணி எத்தனை பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் நாங்கள் அதை எட்டுவதற்கு முயற்சி செய்வோம் என்று. எங்களுக்கு அடுத்து மிகப்பெரிய வேலை இருக்கிறது. இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு பார்க்கலாம்," என்று கூறினார்.
ஹாரி ப்ரூக் குறிப்பிட்டதுபோல, இந்திய அணியின் பந்துவீச்சில் சற்று பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விரைவாக ரன் சேர்த்த போது, இந்திய அணியால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது புதிய பந்து கைக்கு வந்தவுடன் தான் இந்திய பந்துவீச்சாளர்களால் கடைசி ஐந்து விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது.
எனவே, இந்திய அணி புதிய பந்தில் விரைவாக விக்கெட் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். எத்தனை பெரிய இலக்கை நிர்ணயம் செய்தாலும், விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியும்.