விசாகப்பட்டினம் : இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனியாளாக ஆட்டத்தை மாற்றி காட்டுவார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாளை இந்திய அணி விளையாடவுள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்காக இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பவுலர்களை வெளுத்து வாங்கினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

ஸ்பின்னர்களை ஃபிரண்ட் மற்றும் பேக் ஃபூட்டில் எளிதாக சமாளித்து அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆங்காங்கே சேவாக்கின் சாயலை வெளிப்படுத்துவார். இந்திய அணியின் சேவாக் எப்படி ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காமல் பொளந்து கட்டுவாரோ, அதுபோல் எதிரணி ஸ்பின்னர்களின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அழுத்தத்தை கொடுக்கிறார் ஜெய்ஸ்வால்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே மிரட்டலான ஃபார்மில் இருந்தார். அதனை விடவும் சிறந்த ஆட்டத்தை ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்திலும் வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த பேட்ஸ்மேன்களால் நன்றாக ரன்களை சேர்க்க முடியும். இந்த பிட்சில் ஜெய்ஸ்வாலுக்கு நல்ல தொடக்க கிடைத்தாலே, ஆட்டத்தை மொத்தமாக இந்திய அணி பக்கம் திருப்பிவிடுவார்.

அதேபோல் ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரால் ஆட்டத்தை மாற்றும் இன்னிங்ஸை விளையாட முடியும். கடந்த முறை இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே, ரோகித் சர்மா அப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாடி இருந்தார். கடந்த முறையும் முதல் டெஸ்டில் தோற்று, பின்னர் இந்திய அணி கம்பேக் கொடுத்தது. தோல்வியின் எல்லையில் இருந்து இந்திய அணியை மீட்டு கொண்டு வந்தார் ரோகித் சர்மா.
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தோல்வியை பற்றி கவலைப்படாமல் விளையாடுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதேபோல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறையை பற்றி ரசிகர்கள், அவர் இன்னும் முழுமையாக அந்த அணுகுமுறைக்கு மாற முடியவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் கூட்டணி இணைந்ததில் இருந்து இங்கிலாந்து அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை இழக்கவில்லை என்பதை மனதில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.