மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் ஒரே இடத்திற்கு மூன்று பேர் போட்டி போடும் சூழல் உருவாகி இருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.
இந்த தருணத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு படையில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஆகாஷ் தீப் மற்றும் ஆர்ஸ்தீப் ஆகியோர் காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.

இந்த தருணத்தில் மான்செஸ்டர் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா இந்த தொடரில் பேட்டிங்கில் நான்கு அரை சதம் அடித்து இருக்கின்றார். ஆனால் பந்துவீச்சில் வெறும் மூன்று விக்கெட்டுகள் மட்டும் தான் வீழ்த்தியுள்ளார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மொத்தமாக நடப்பு டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸில் 77 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 42 ஆகும். பந்துவீச்சில் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இதனால் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
ஆனால் அவருடைய பேட்டிங் எதிர்பார்த்தபடி அணிக்கு கை கொடுக்கவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் டக்அவுட் ஆனார். ஒருவேளை அவர் கொஞ்சம் நிலைத்து நின்று இருந்தால் கூட இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இந்த தருணத்தில் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
மேலும் கீழ் வரிசையில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டியும் காயம் அடைந்திருக்கிறார். இதனால் அவருக்கு மாற்று வீரர் என்றால் சர்துல் தாக்கூர் சரியான தேர்வாக இருப்பார். ஆனால் சர்துல் தாக்கூரும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி இடத்திற்கு குல்தீப் சேர்க்கலாமா இல்லை வாஷிங்டன் சுந்தரை இரண்டாவது பந்துவீச்சாளராக தொடர்வாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை குல்தீப் யாதவ் பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என கம்பீர் நம்பினால் வாஷிங்டன் சுந்தர் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து ஆடுகளத்திற்கு மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையற்ற ஒன்று. ஒருவேலை வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய இடத்தை பிடித்துக் கொண்டால் நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவார். இதன் மூலம் குல்தீப்க்கு மீண்டும் இடம் கிடைக்காது. இதன் காரணமாக கம்பீர் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.