ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 152 ரன்கள் தேவையாக உள்ள நிலையில், அதனை எட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 3வது நாள் முடிவிலேயே இந்திய அணியின் ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளனர். இதனால் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 152 ரன்கள் எடுத்தாலே எளிதாக வெற்றிபெற முடியும்.

இந்திய அணியின் கைகளில் 10 விக்கெட்டுகள் இருந்தாலும், ராஞ்சி பிட்சில் நடந்து வரும் மாற்றங்கள் ரசிகர்களை பீதியாக்கியுள்ளது. ஏனென்றால் முதல் இன்னிங்ஸிலேயே கண் மூடி திறப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அதேபோல் இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட 2 செஷன்களுக்குள் 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்திய அணியின் ஸ்பின்னர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், இங்கிலாந்து அணியின் சோயப் பஷீர் அபாயகரமானவராக உள்ளார். அவரின் உயரமும், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனும் இந்திய பேட்ஸ்மேன்களை ஏமாற்றக் கூடியதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முதல் இன்னிங்ஸிலேயே 30க்கும் அதிகமான ஓவர்களை தொடர்ச்சியாக வீசி அனைவரையும் அசரடித்தார்.
இதனால் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற 3 விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினால், ஜடேஜா மற்றும் சர்பராஸ் கான் இருவரையும் அடுத்தடுத்து களமிறக்க வேண்டும்.
ஏனென்றால் இவர்கள் இருவருமே ஸ்பின்னர்களை எதிர்த்து மிகச்சிறப்பாக விளையாடுவார்கள். சுப்மன் கில் மற்றும் ரஜத் பட்டிதர் இருவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி வருவதால், ரிஸ்க் எடுக்காமல் இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சோயப் பஷீரிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால அவரின் பந்துகள் தாழ்வாகவும், நல்ல டர்னும் இருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும்.
முதல் செஷனை கொஞ்சம் பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை சிதறடிக்க வேண்டும். ஆண்டர்சன் ஒருமுனையில் இருந்து அட்டாக் செய்தாலும், விக்கெட்டை கொடுக்காமல் விளையாட வேண்டும். முதல் செஷனில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் விக்கெட் கொடுக்காமல் 70 ரன்கள் சேர்த்தாலே, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது.