அகமதாபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கு முன்னர் பிட்ச் மற்றும் வானிலை குறித்த தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
அகமதாபாத் மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரி சமமாக ஒத்துழைக்கும் என்று கூறப்படுகிறது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 முதல் 270 ரன்கள் வரை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு இருக்கும். அதன் பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவும்.

இரண்டாவது இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கூடுதல் ஒத்துழைப்பு கிடைக்கும். டாஸ் வெல்லும் அணி, தங்கள் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பேட்டிங் அல்லது பௌலிங் செய்ய தீர்மானிக்கலாம்.
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றால் இந்திய அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பௌலிங்கை தேர்வு செய்யலாம். இந்த மைதானத்தில் சேஸிங் செய்யும் அணிகள் அதிக வெற்றிகளை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதம் 38 சதவீதம் வரை இருக்கலாம். இதனால், இரண்டாவது இன்னிங்சில் பந்து வீசும்போது பெரிய சிரமம் இருக்காது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. எனவே, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணி முயற்சிக்கும். அதே சமயம், இந்திய அணி இதுவரை வாய்ப்பு அளிக்கப்படாத வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை பரிசோதிக்க முயற்சிக்கும். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.